வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் நியமனம்! தமிழ் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் நியமனம்! தமிழ் அரசியலில்        தாக்கத்தை ஏற்படுத்துமா? 



வடக்கு மாகாணமானது எப்போதுமே அரசியல் ரீதியாக குறிவைக்கப்படும் ஒரு பிரதேசமாக இருக்கின்றது. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்து வரும் நிலையில், அரசியல் ரீதியாக பெரும் செல்வாக்கு செலுத்தி வருகின்றார்கள்.

இதன் காரணமாக நீண்ட காலமாக அரசியல் ரீதியாகவும், அதிகார ரீதியாகவும் வடக்கு மாகாணம் அரசாங்கத்தினால் குறிவைக்கப்படுகின்றது.
இருந்தபோதும் இலங்கை அரசாங்கத்தின் அரசியல் ரீதியான காய் நகர்த்தல்களுக்கு எதிராக வியூகம் வகுத்து செயற்பட முடியாத நிலையில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் அரசியல் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது.
நாட்டில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடும் நிலையிலும், பொருளாதாரம் பிரச்சனை மற்றும் முழு முடக்கம் நோக்கி தேசம் பயணித்துக் கொண்டிருக்கும் போதும் வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் நியமனம் ஒரு பெரும் சர்ச்சையை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
வவுனியாவில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த எஸ்.எம்.சமன் பந்துல சேன வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக அரசியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் சாதாணமாக பார்க்க கூடிய ஒன்றல்ல, தமிழ் மக்களை அரசியல் ரீதியாக மிகவும் பாதிக்கக்கூடிய ஒரு நியமனம். இந்நியமனம் ஊடாக இரண்டு கருத்து வேறுபாடுகளை இனங்காண முடியும். தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் இருப்பு பாதிக்கப்படும் என்று ஒரு சாராரும், தமிழ் தலைமைகள் அல்லது அதிகாரிகள் சாதாரண மக்களுக்கு செய்ய முன்வராத வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என ஒரு சாராரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
வடக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பிரதம செயலாளர் ஒரு பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதுடன், மாகாணசபைக்குரிய தேர்தலை நடத்த விரும்பாத இலங்கை அரசானது, முதலமைச்சர் இல்லாத வடக்கு மாகாணசபைக்கு பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவரை நியமனம் செய்மதிருப்பது எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் அழிவை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்படுகின்றது.
கொரோனா பெருந்தொற்றானது நாட்டில் வேகமாக பரவிவரும் நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை பயன்படுத்தி, வடக்கில் இவ்வாறான நியமனங்களை வழங்கி வருவதாக தமிழ் தலைமைகள் அறிக்கைகளை விடுத்துள்ளனர்.
தமிழ் தலைமைகளான இரா.சம்பந்தன், ஐங்கரநேசன் மற்றும் சிறிதரன், சுமந்திரன் போன்றோர் மாகாணத்தின் பிரதம செயலாளரின் நியமனத்திற்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டுள்ள போதிலும், அவர்களின் எதிர்ப்பானது வழமைபோன்று அட்டக்கத்தியாகவும், எதிர்த்தோமே என்பதற்கான அடையாளமுமாக மாத்திரமே தமிழ் மக்களால் பார்க்கப்படுகின்றது.
பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக நியமனம் வழங்கப்பட்டது, வடக்கு மாகாணத்தில் வசித்து வரும் தமிழ் மக்களின் இருப்பில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் தமிழ் தலைவர்களுக்கு ஒரு தெளிவு இருப்பதாக தெரியவில்லை.
வடக்கு மாகாணத்தில் இயங்கிவரும் அரச சேவைகள் நெருக்கடிக்கு உள்ளாகும், தமிழ் மக்களின் வாழ்க்கை நெருக்கடிக்குள் உள்ளாகும் வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகின்றது.
வடக்கு மாகாணசபையானது இயங்கும் பட்சத்தில், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் பிரதம செயலாளர், மாகாண முதலமைச்சரின் இணக்கப்பாட்டுடன் நியமிக்கப்பட வேண்டும் என்பதே நியதிச்சட்டம்.
வடக்கு மாகாணத்தில் முதலமைச்சரின் ஆட்சி காலம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், மாகாணசபை தேர்தலை நடத்தாமல் இலங்கை அரசு பின்னடித்து வருகின்றது.

இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளது, ஒன்று இலங்கையில் எதிர்க்கட்சிகள் இணைந்து பலம் பெற்றுவிட்டால் அது இப்போதைய அரசாங்கத்திற்கு ஆபத்தாகவே முடிந்துவிடும். இரண்டாவது தமிழ் மக்களுக்கு இலங்கையில் குறைந்த அதிகாரங்களை வழங்கக்கூடியதாக இந்த மாகாணசபை இருப்பதன் காரணமாக, மாகாணசபை தேர்தலை நடத்தி அந்த அதிகாரங்களை தமிழர்களுக்கு தொடர்ந்து வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை.
இதன் காரணமாக ஜனாதிபதியால் வடக்கு மாகாணத்தில் ஆளுனர் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் ஜனாதிபதியால் வடக்கு மாகாண பிரதம செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக நேரடியாக வடக்கில் மத்திய அரசின் ஆட்சி அதிகாரமே நடைபெறும் இதன் போது, வடக்கு மாகாணத்தின் பல அதிகாரமட்டங்களுக்கு பெரும்பான்மை இனத்தை சேர்ந்த  அதிகாரிகள் நியமிக்கப்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகின்றது.
முதலமைச்சர் இல்லாத வடக்கு மாகாணசபை மாலுமி இல்லாத கப்பலை போன்றது, ஆகவே அதை முற்றுமுழுதாக இயக்க வேண்டிய பொறுப்பு பிரதம செயலாளருக்கே இருக்கின்றது.
இலங்கை அரசியலை பொறுத்தவரையில் தமிழ் தேசிய தலைமைகளாக இருந்தாலேன்ன, முஸ்லிம் தலைமைகளாக இருந்தாலென்ன இலங்கை அரசாங்கத்தின் சலுகைகளுக்காக விலைபோகும் முகவர்களாக செயற்படுகின்றமையை காணக்கூடியதாக இருக்கின்றது. இதன் காரணமாகவே, தமிழ் பேசும் மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளை இழந்து பிடிமானம் அற்ற அல்லது நிவாரணத்திற்கு கையேந்தும் மக்கள் கூட்டமாக மாற்றப்பட்டுள்ளனர்.
அதிகாரத்தில் அமருவதற்காக, அரசியல் தலைமைகள் மக்களை ஏமாற்றுகிறார்கள். இலங்கை அரசியலில் அதிகார போட்டிக்காக நடைபெறும் நிகழ்ச்சி திட்டங்களாக அரசியல் மாற்றங்கள், நியமனங்கள் இருப்பதாக, தமிழ் தலைமைகளால் மக்களுக்கு எடுத்து சொல்லப்படுகின்றது.
இலங்கை அரசியலில் மிக நுணுக்கமாக தமிழ் மக்களை ஊடறுத்து அரசியல் மற்றும் தமிழ் அதிகார மையங்கள் மீது மத்திய அரசு ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது. இவைகளை அடையாளம் காணும் தமிழ் தலைமைகள் பெரிதாக எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டமுடியாத கையாலகாத தன்மையை கொண்டுள்ளதால், அதனை புரிந்து வைத்துள்ள பெரும்பான்மை கட்சிகள், தமிழ் மக்களின் அதிகார மையங்களை கைப்பற்றி வருகின்றது.
இலங்கையில் மாறி, மாறி ஆட்சிக்கு வரும் இரண்டு பெரும்பான்மை கட்சிகளும் தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் பலவீனம் தெரிந்து, தொடர் அரசியல் ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகின்றது.
ஆட்சியில் இருக்கும் கட்சி சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளும் ஜனநாயக அத்துமீறல்களை, அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சியானது விரிவுபடுத்தும் அல்லது பலப்படுத்தும். இந்த நிகழ்ச்சிதிட்டமானது வடக்கு கிழக்கில் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட தமிழர் மீதான அரசியல் ஆக்கிரமிப்பு. இதற்கு எதிராக தமிழ் தலைமைகள் தங்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பதில்லை.
தமிழ் மக்களின் அரசியலை சூனியமாக்குவதற்கு, கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசு எவ்வாறு மிக நுணுக்கமாக திட்டமிட்டு அழிவுகளை ஏற்படுத்தியதோ! அதே நிகழ்ச்சிதிட்டத்தின் ஒரு தொடர்ச்சியே வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் நியமனம்.
இவ்வாறான அதிகார மட்டங்களின் நியமனங்கள் அரசியல் சார்ந்த துறைகளில் மாத்திரமின்றி, கல்வி, சுகாதாரம், மருத்துவம் மற்றும் தொழில்துறைகள் சார்ந்தும் எந்தவிதமான அரசியல் நேர்மையும் கடைப்பிடிக்கப்படாமல் தமிழர் பகுதியில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினரை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட சட்டங்கள் ஒருபுறம், இப்போது சிறுபான்மை மக்களை நிர்வாக ரீதியாக ஒடுக்க இவ்வாறான நியமனங்களை அரசு வழங்க தொடங்கியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முடக்கமாக இருக்கும் இக்காலப்பகுதியில் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த பிரதம செயலாளர் நியமனமானது தமிழரை ஒடுக்கும் நிகழ்ச்சி நிரலில் இருந்து இலங்கை மாறவில்லை என்ற சமிக்கையை காட்டி நிற்கின்றது.
தமிழ் மக்களிடம் தமிழ் தேசியம் பேசி ஒட்டுக்களை பெற்று பாராளுமன்றம் சென்ற தலைமைகள் இதற்கு எதிராக எந்தவிதமான காத்திரமான போராட்டங்களையும் முன்னெடுக்காமல், வெறும் பத்திரிகை அரசியலுடன் நிறுத்திக் கொண்டுள்ளனர்.
தமிழ் தலைமைகளின் பத்திரிகை அரசியல் தமிழ் மக்களிடம் கூட ஒழுங்கான முறையில் சென்றடையாத நிலையில், சிங்கள மக்களிடமோ அல்லது சிங்கள அரசியல் தலைவர்களிடமோ சென்றடைய வாய்ப்புக்கள் இல்லை என்பதே யதார்த்தமான உண்மையாக இருக்கின்றது.
வடக்கு மாகாணத்தை பொறுத்தளவில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில், தமிழ் மக்கள் குறிப்பிட்டு சொல்லக்கூடிய முன்னேற்றத்தை கண்டிருக்கவில்லை. அடிப்படை உள் கட்டுமானங்கள் அபிவிருத்தி கண்டிருக்கவில்லை, கல்வி, விளையாட்டு மற்றும் தொழில் வாய்ப்புக்கள், பெண்தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரம், கலாசார சீரழிவுகள் என்பனவற்றுடன், வடக்கு மாகாணம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சட்டங்கள் சரியான முறையில் அமுல்படுத்தப்படாத காரணத்தினால் போதைவஸ்த்து பாவனை அதிகரித்தது. வாள்வெட்டு கும்பல்களின் அட்டகாசம் போன்றன யுத்தத்;தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கில் அதீத வளர்ச்சி பெற்று, அப்பாவி மக்களின் வாழ்வில் நாளாந்த அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
நிர்வாக ரீதியாக வடக்கு மாகாணத்தில் தமிழ் அதிகாரிகளே அனைத்து துறைகளிலும் செயலாற்றி வந்துள்ளனர். இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பான அரச நடைமுறை தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. இருந்தபோதும், முற்றுமுழுதாக தமிழ் அதிகாரிகளால் தமிழ் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டது அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள் என்று கூறிவிட முடியாது.
இலங்கையை பொறுத்தவரையில் போக்குவரத்து துறை, கல்வித்துறை, பொருளாதார உற்பத்தி துறைகளில் மிக மோசமான நிலைமைகளில் இருப்பது வடக்கு மாகாணம்.
வடக்கு மாகாணத்தின் இந்த பிந்தங்கிய நிலைமைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் ஒரு சிங்கள அதிகாரியை வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமித்து இருக்கிறதா??? என்பது ஒரு நீண்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய கேள்வி!
யுத்தத்தின் பின்னர் தமிழ் அரசியல் தலைமைகள் தடுமாற்றத்துடன் தங்கள் அரசியல் விளையாட்டுக்களை ஆரம்பித்திருந்தனர். ஒரு சாரார் தீர்வின் மூலமாக உரிமைகளை பெற்றதன் பின்னர் அபிவிருத்தி என்றும், ஒரு சாரார் அபிவிருத்தி மற்றும் உரிமைப்போராட்டங்கள் சமாந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், ஒரு சாரார் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பக்களை பெற்று கொடுப்பதோ! வீட்டுத்திட்டங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை அரசிடம் இருந்து பெற்றுக்கொடுப்பதோ, எமது அரசியல் உரிமைகளை பாதிக்கும் ‘தீபாவழிக்கு’ தீர்வு கிடைத்த பின்னர் உட்கட்டமைப்புக்கள் பற்றி பேசலாம் என்று அறிக்கைகள் விட்டு, மூன்று நான்கு தலைமைகளாக உடைந்து போனார்கள்.

தமிழ் மக்களுக்கான கூட்டு வாழ்வு, தமிழ் மக்களின் மதவழிபாட்டு தலங்கள் ஆக்கிரமிப்பு, தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான அரசியல் பார்வை இருக்கக் கூடாது, ஒரு கட்டமைக்கப்பட்ட குடும்ப பொருளாதாரங்கள் அமையக்கூடாது என்பதில் தெளிவாக முடிவெடுக்கப்பட்டு, தமிழ் மக்கள் வாழும்பகுதிகளில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் உட்கட்டமைப்புக்களை சிதைக்கும் முகமாக எண்ணுக்கணக்கற்ற முறையில் நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் களமிறக்கப்பட்டன. இந்நிறுவனங்களிடம் சிக்கிய குடும்பப் பெண்கள் பலர் தற்கொலை செய்துகொண்டது தனிக்கதை.
இலங்கையில் வடக்கு கிழக்கு போன்ற தமிழர் பகுதிகளில் உட்கட்டுமானங்கள் அபிவிருத்தி நோக்கி அல்லது முன்னெற்றப்பாதையில் நடைபோடவில்லை என்றால் இலங்கை அரசு கணிசமான அளவிற்கு தனது நிகழ்ச்சி நிரலில் முன்னெற்றத்தை கண்டுள்ளது என்பதே உண்மை.
இந்த முன்னேற்றமே தமிழர்களின் அரசியல் அழிவிற்கு காரணமாக இருக்கின்றது. இதற்கு முற்றுமுழதாக பொறுப்பேற்க வேண்டியவர்களாக தமிழ் அரசியல் தலைமைகள் இருக்கின்றார்கள்.
இலங்கையில் ஒரு பிரதேசத்தின் அதிகாரமானது பிரதேச செயலாளரிடம் உள்ளது. பிரதேச சபைகள் ஒரு அதிகாரத்தின் அலகு நாட்டைப் பொறுத்தவரையில் மாகாணசபை முறைமை சிறுபான்மையினருக்கு ஒரு சில குறிப்பிட்ட அதிகாரங்களை வழங்கியுள்ளது.
மாகாணசபை முறைமைக்குள் ஒர் பெரும்பான்மை அதிகாரி செயலாளராக நியமிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு கீழ் நிலை அதிகாரிகள் தொடர்ச்சியாக பெரும்பான்மையினர் நியமிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக தமிழ் தேசிய தலைமைகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படும் பட்சத்தில் தமிழர்கள் பிரதேசசபை அதிகாரங்களை கூட இழக்க வேண்டிய நிலைமை எற்படும். எழை எளிய மக்களுக்கான அரசின் சேவைகள் இவ்வாறான நியமனங்களினூடாக சென்றடையுமா? ஏன்பதை காலம்தான் பதில் கூற வேண்டும்.
வடக்கில் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும், அதிகாரிகளின் செயற்பாடுகளும் சுயநலமிக்கதாகவே பல துறைகளில் காணப்படுகின்றது. மக்களுக்கு சேவையாற்றும் எண்ணமில்லாது அதிகார ஆட்சிசெய்யும் மன நிலையானதும், குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கும், பணம் படைத்தவர்களுக்கு சேவையாற்றும் மன ஓட்டமும் வடக்கு மாகாணத்திற்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் அழிவின் ஆரம்பத்தை உணர்த்தி நிற்கின்றது.
யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பகுதியில் நிலத்தடிநீரில் பாச்சப்பட்ட கழிவு எண்ணை! அதன் கசிவு காரணமாக இன்றும் பல பிரதேசங்களில் மக்கள் நீரை பாவிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.
வடக்கின் கல்வித்துறையை எடுத்துக்கொண்டால், தமிழ் கிராமங்களில் அசிரியர்கள் நியமிக்கப்படாமல் பின்தங்கிய நிலையில் இருக்கும்போது யாழ்ப்பாணத்தின் கல்வி வலயத்தில் மாத்திரம் 3 ஆயிரத்திற்கு அதிகமான ஆசிரியர்கள் மேலதிகமாக பராமரிக்கப்படுகின்றார்கள், இவ்வாறான நிலைமைக்கு அரசியல்வாதிகளா? ஆதிகாரிகளா? காரணம்.
ஆக வடக்கு மாகாண பிரதம செயலாளரின் நியமனமானது சமானிய மக்களுக்கு அரச சேவைகளை வழங்குமா? ஆல்லது தமிழ் மக்களின் அரசியல் அழிவின் ஆரம்பமா? ஏன்பதை தமிழ் அரசியல் தலைமைகளும், அதிகாரிகளுமே எதிர் காலத்தில் தீர்மானிக்க வேண்டும்.
தமிழ் மக்கள் சார்ந்து செய்யப்படும் எந்த அரசியலும் எப்போதும் தோற்றுப் போகாது. ஏகாதிபத்திய அரசுகளுக்கும், ஒரு குறிப்பிட்ட வர்க்கம் சார்ந்தும் செய்யப்படும் அரசியல் தமிழ் மக்களை மீள முடியாத ஒரு அரசியல் அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.


Thank You -  Senthee News




Post a Comment

Previous Post Next Post